
பொதுவாக இயக்குனர் ஷங்கரின் தயாரிப்பில் வெளிவரும் படங்கள் நல்ல படங்களாகத்தான் இருக்கும். "அறை எண் 305ல் கடவுள்" திரைப்படத்திற்கு பின் இரண்டாவது முறையாக மிகப்பெரும் மொக்கையை சந்தித்தது இந்த ரெட்டச்சுழி படத்தில்தான்.
.
பாரதிராஜா (கம்யுனிஸ்ட்), பாலச்சந்தர் (காங்கிரஸ்காரர்) குடும்பத்திற்க்கிடையேயான 40 வருடப் பகை இவர்கள் வீட்டு குட்டிப்பிள்ளைகள் வரை தொடர்கிறது. இவர்கள் வீட்டில் பத்து, அவர்கள் வீட்டில் பத்து என்று குட்டிக்குட்டி உருப்படிகள். மிக முதிர்ச்சியான வார்த்தைகள் செய்கைகளோடு திரையில் உலவும் குட்டிப்பசங்க என்றாலே எனக்கு மிகப்பெரும் ஒவ்வாமை. குறைந்தபட்சம் "பசங்க" திரைப்படம் போலாவது இருந்திருக்கலாம். சத்தியமா இல்லை. அந்த குட்டிப்பசங்க நடவடிக்கைகள் இன்னொரு "மாத்தி யோசி". இதற்கிடையில் இந்த வீட்டு அஞ்சலிக்கும் அந்த வீட்டு ஒரு பையனுக்கும் (வேறு எவருமே கிடைக்கவில்லையா இந்த கதாப்பாத்திரத்துக்கு) காதல். இடையில் கருணாஸ். ஸப்பாஆஆஆஆஆ முடியல.
.
இயக்குனர் இமயம் பாரதிராஜா (கல்ல கூட நடிக்க வைக்கும் அற்புத இயக்குனர்), இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் (எத்தனையெத்தனை அறிமுகங்கள் இன்று ஜொலிக்கும் நட்சத்திரங்கள்) இரண்டு பேரும் நடித்த படம் என்பதனால் எனக்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது இந்த படத்தின் மேல். மேலும் "ஆயுத எழுத்து" படத்தில் பாரதிராஜாவின் நடிப்பு என்னை மிகவும் கவர்ந்திருந்தது. இயக்குனர் தாமிரா அப்படியே போட்டு உடைத்திருக்கிறார் இவர்களை. இவர்கள் இருவரும் இந்த படத்திற்கு தேவையா என்பதே என் முதல் கேள்வி. அதே நேரத்தில் தன் குரு பாலச்சந்தரையும், இமயம் பாரதிராஜாவையும் தன் படத்தில் நடிக்க வைத்திடவேண்டும் என்று மிகப்பெரும் ஆசையை நிறைவேற்றி கொண்டவரை நான் குற்றம் சொல்லவும் முடியாது. நல்ல கதை, திரைக்கதையோடு இவர்களை அணுகியிருக்கலாம் என்பதே ஆசை.
.
அந்த அவ்வளவு குட்டி பசங்க தேவையா என்பது மற்றொரு கேள்வி. இந்த பக்கம் ஒரு நாலு அந்த பக்கம் நாலு போதுமே. அந்த இருபது பிள்ளைகளில் ஓரிருவர் நல்லா பண்ணியிருந்தாங்க. குறிப்பாக அந்த பையன், பாரதிராஜாவிடம் நட்பாக விரும்பி, "தோழரே, நானும் நம்ம இயக்கத்தை பத்தி நிறைய படிச்சிருக்கேன்" என்று ஆரம்பிக்கும் வசனம் அதகளம். படத்தில் சில சில இடங்களில் வசனங்கள் நன்றாக இருந்தது. சில அரசியல் வசனங்களும் நல்லா இருந்தது. படத்தின் மொத்த குழுவில் ஒளிப்பதிவாளர் செழியன் நிறைவாக செய்திருக்கிறார். கார்த்திக் ராஜா, கிடைக்கின்ற வாய்ப்புகளை கூட சொதப்புவது வருத்தமாக இருக்கிறது. ஒரு பாடல் கூட ரசிக்கும்படியோ முனுமுனுக்கும்படியோ இல்லை.
.
கிட்டத்தட்ட மொத்த படமும் ரொம்ப செயற்கையா ஒரு நாடகம் மாதிரி இருந்தது. இயக்குனர் தாமிரா, இமயம், சிகரம், ஷங்கர் எல்லாருக்கும் நன்றாக கதைசொல்லியிருப்பார் போலும். ஷங்கரின் அடுத்த தயாரிப்பான அனந்தபுரத்து வீடாவது நன்றாக இருக்கும் என்று எதிர்பார்ப்போம்.
.
ரெட்டச்சுழி - கோடை விடுமுறையில், குடும்பத்தோடு குழந்தைகளோடு, ஆபாசங்கள் இல்லாத படம் பார்க்க விரும்பினால் செல்லுங்கள். அல்லது இமயமும் சிகரமும் அஞ்சலியும் திரையில் எப்படி இருக்கிறார்கள் என்று பார்க்க விரும்பினால் செல்லுங்கள். மற்றபடி இந்த படத்தை பார்க்காமலிருப்பது சாலச்சிறந்தது என்றே சொல்வேன்.
.
மறக்காம உங்க கருத்துக்களை எழுதுங்க. தமிழ்மணம், தமிழிஷ் ஓட்டு போடுங்க..
24.04.2010




10 comments:
கரிக்டான விமர்சனம்பா.!
ஆபாசங்கள் இல்லாத குழந்தைகளோடு// வார்த்தைகளை மாத்திப்போடுபா.. ஒர்மாதிரியா இர்க்குது.!
@ஆதிமூலகிருஷ்ணன் : மொத போனிணா நீ.. தேங்க்ஸ்ணா.. அப்பாலிக்கா நீங்க சொன்னத மாத்திட்டேன்..
MSK,
நீண்ட நாட்களுக்கு பிறகு, ஒரு விமர்சனம். கிட்ட தட்ட மூன்று வாரங்காக காணவில்லை என்று இருந்த நீங்கள் மறுபடியும் வந்தது மகிழ்வே.
உங்களின் விமர்சனம் மாறுபட்டுள்ளது.இதுவரை பார்த்த பலரும் நல்ல படம் என்று சொல்கிறார்கள். பார்க்கலாம்.
//இமயமும் சிகரமும் அஞ்சலியும் திரையில் எப்படி இருக்கிறார்கள் என்று பார்க்க விரும்பினால் செல்லுங்கள்//
என்ன கொடுமை சார் இது? அதுக்கு நான் டிவி இண்டர்வியூவே பார்த்துக்குவேனே?
//ஷங்கரின் அடுத்த தயாரிப்பான அனந்தபுரத்து வீடாவது நன்றாக இருக்கும் என்று எதிர்பார்ப்போம்//
நீங்க தைரியமாக பெட் கட்டலாம், என்னை நம்பி. நாகாவின் அடுத்த படைப்பை இன்றுதான் பார்த்தேன் (அனதபுரத்து வீட்டிற்கு பின அடுத்த படைப்பு - அமுதசுரபி) சூப்பர்.
நம்பி போகலாம்.
// அந்த குட்டிப்பசங்க நடவடிக்கைகள் இன்னொரு "மாத்தி யோசி". //
மரண மொக்கையோ? இதோடவே விமர்சனத்த நிறுத்தியிருக்கலாம்.
@King Viswa : கொஞ்ச நாளாவே எழுதுவதற்கு முடிவதே இல்லை. கொஞ்சம் பிஸி. கொஞ்சம் சோம்பேறித்தனம். இரண்டு வாரங்களுக்கும் மேலாக இணைய தொடர்பு இன்மை. :(
முழு நீள நகைச்சுவை என்று இறங்கி அடித்திருந்தால் சிறப்பான படமாக உருவாக்கியிருக்கலாம். அதை கோட்டை விட்டிருக்கிறார்கள்.
நாகாவின் மர்ம தேசம் கொஞ்சம் பார்த்திருக்கிறேன். என்பதனால் நம்பி போகப்போகிறேன். உங்கள் வார்த்தைகள் கூடுதல் நம்பிக்கையை அளிக்கிறது. :) அமுதசுரபி அடுத்த படமா அல்லது சீரியலா?
//மிக முதிர்ச்சியான வார்த்தைகள் செய்கைகளோடு திரையில் உலவும் குட்டிப்பசங்க என்றாலே எனக்கு மிகப்பெரும் ஒவ்வாமை. //
இதுதான் படத்தின் மீதான கோபத்திற்கு மிகமுக்கிய காரணம்.
மற்றபடி இந்த படத்தை பார்க்காமலிருப்பது சாலச்சிறந்தது என்றே சொல்வேன்.
.
நீங்க இப்படி தொபக்கடீர்னு போட்டு உடைச்சிடலாம் ஆனா நான் இந்த படத்தை டைம்பாஸ் லிஸ்ட்ல போட்டு வச்சி இருக்கேன்..
படத்தில் எதுவுமே சரியில்லை என்பது மட்டும் உண்மை. அஞ்சலி கூட கொஞ்சம் குண்டாகி சரியில்லாமல் தான் தெரிந்தார். இந்தப் படத்தில் இவரைப் பார்த்து தான் தெரிந்தது, அங்காடித் தெரு வெளிவர எத்தனை நாள் ஆகியிருக்கிறது என்று.
விமர்சனம் நன்றாக இருக்கிறது. //மிக முதிர்ச்சியான வார்த்தைகள் செய்கைகளோடு திரையில் உலவும் குட்டிப்பசங்க என்றாலே எனக்கு மிகப்பெரும் ஒவ்வாமை// உண்மைதான். தமிழ்ப் படத்தில்தான் இந்த பைத்தியக்காரத்தனம் இருக்கும். குழந்தைகள் பிஞ்சில் பழுத்தவைகளாகவும் பெரிசுகள் குழந்தைத் தனம் என்ற பெயரில் லூசுத்தனம் செய்பவர்களாகவும் இருப்பார்கள், குமட்டுகிற அளவுக்கு.
Post a Comment