
இதுவரை தமிழ் சினிமா பதிவு செய்ய மறந்த மனிதர்கள் வசிக்கும் தெருதான் இந்த அங்காடித் தெரு. ஒரு நாள் முழுக்க சென்னை ரங்கநாதன் தெருவில் சுற்றிதிரிந்ததை போலொரு உணர்வு. நன்றி வசந்த பாலன், இனி தி.நகரில் துணிமணிகளை எடுத்துப்போடும் அந்த மனிதர்களை "இதை எடுங்க, அதை எடுங்க" என்று படுத்திஎடுக்க தயங்கவும், அவர்களை சிநேகமாய் பார்க்கவும், புன்னகைக்கவும், நன்றி சொல்லவும் எம்மக்களுக்கு முகம் வருமென்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. ஆமாம், இந்த திரைப்படம் கூட்டம்கூட்டமாய் மக்கள் மொய்க்கும், தி.நகரில் கிட்டத்தட்ட கொத்தடிமைகளாக வேலைசெய்யும் அந்த இளம் மனிதர்களையும், மேலும் அந்த தெருவில் பிழைத்துக்கொண்டிருக்கும் மீச்சிறு மனிதர்களின் வாழ்வியல் போராட்டம் தான் இந்த அங்காடித் தெரு.
.
திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து வறுமையில் இங்கு தி.நகர், செந்தில்முருகன் ஸ்டோர்ஸ்க்கு வேலைக்கு வரும் ஒரு புதுமுக நடிகர், பாண்டி, இங்கு கடையில் வேலை பார்த்துக்கொண்டிருக்கும் கனி (அஞ்சலி), சோபியா, சௌந்தரபாண்டி, சூப்பர்வைசர் (இயக்குனர் வெங்கடேஷ்), அண்ணாச்சி, கடையில் பிற வேலை செய்யும் மனிதர்கள், போலிஸ்காரர்கள், ஊனமுற்ற மீச்சிறு வியாபாரிகள், கழிப்பிட நிர்வாகம் செய்பவர், இன்னும் பற்பல, இவர்களின் வாழ்க்கை மிக அற்புதமாய் மிக யதார்த்தமாய், மிகுந்த detailed-ஆக பதிவு செய்திருக்கிறது இத்திரைப்படம். படத்தின் ஒரு frame கூட அனாவசியமானது அல்ல. இந்த கடையில் வேலை செய்யும் மனிதர்கள் ஒரே இடத்தில தூங்கி, எழுந்து, ஒன்றாய் காலைக்கடன்கள் முடித்து, காலை முதல் இரவு வரை மாடாய் உழைத்து, அடிவாங்கி, மிதிவாங்கி, குறிப்பாக இந்த பெண் பிள்ளைகள் படும்பாடு, யப்பப்பா.. இந்த கடைகளில் வேலைபார்க்கும் மனிதர்கள் எப்போது சாப்பிடுவார்கள், வேலை நேரத்தில் எப்போது ஒன்றுக்கோ அல்லது இரண்டுக்கோ செல்வார்கள், இந்த பெண்கள் மாதவிடாய் காலங்களில் எப்படி வேலைக்கு செய்வார்கள், எப்போது தூங்குவார்கள் என்றெல்லாம் யோசித்ததுண்டா?? இந்த நகரங்கள், இந்த பெரிய மனிதர்கள், பணக்காரர்கள், எத்தனை விளிம்பு மனிதர்களின் ரத்தத்தை உறிஞ்சி வீங்கி பெருத்துக்கொண்டிருக்கிறது!!!
.
படத்தின் அத்தனை கதாப்பாத்திரங்களும் எத்தனை விதம், எத்தனை மனிதர்கள், எத்தனை முகங்கள், என்ன மாதிரியான வாழ்க்கை, எத்தனையெத்தனை முரண்கள். ஒரு முகக்குவியல்களுக்கிடையில் நகர்ந்து போனபடியொரு உணர்வு. ஒரு மிக கச்சிதமான தி.நகர். உண்மையிலேயே தி.நகரில் தான் படம் பிடித்தார்களா என்று சந்தேகமாய் இருக்கிறது, அங்கு இவ்வளவு பெரிய ஜனதிரள்களுக்கிடையில் கேமரா வைக்க முடியுமா. முடியுமென்றால் இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவாளருக்கு மிகப்பெரும் பாராட்டுக்கள்.
.
மிக இயல்பான வசனங்கள்(வசனம்:ஜெயமோகன்), மிக இயல்பான கேமரா கோணங்கள், மிக இயல்பான திரைக்கதை. பின்னணி இசை கொஞ்சம் உறுத்தலாய் இருந்தது. (யார் பின்னணி இசை ஜி,வியா அல்லது விஜய் ஆண்டனியா?) மேலும் இரண்டாம் பாகத்தில் கொஞ்சம் சிறு தொய்வுகள். அதை தவிர்த்து பார்த்தால் ஒரு மிக நல்லப்படம். ஹை கிளாஸ், மிடில் கிளாஸ் வாழ்க்கையை வாழும் மனிதர்களுக்கு, இந்த விளிம்பு நிலை மனிதர்களை, மனிதர்களாவே கண்டுக்கொண்டதில்லை. நீங்கள் சென்னைவாசியாய் இருந்தால் தயவுசெய்து இத்திரைப்படத்தை பார்க்கவும்.
.
வசந்த பாலன், மிக்க நன்றி இத்திரைப்படத்திற்காக. ஆனால் இந்த பெரிய கடைகளின் முதலாளிகளிடமிருந்து உங்களுக்கு மிரட்டலோ அல்லது ஆட்டோவோ வரலாம். ஜாக்கிரதையாய் இருங்கள். ஆனால் இந்த மாதிரி படங்கள் பெட்டியில் இருந்து வெளிவருவதற்கு படும்பாடு தமிழ் சினிமாவின் தொடரும் சாபக்கேடு. இன்னும் நந்தலாலா வந்தபாடில்லை. இயக்குனர் வெங்கடேஷ், ஒரு கமர்சியல் இயக்குனர் நீங்கள், சிறப்பாக நடித்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள். அஞ்சலி, class..
.
இனி மேலும் மதுரையில் (மட்டும்) யதார்த்த படமெடுக்கிறேன், என்று குதறுபவர்களே, அல்லது கமர்சியல் சிங்கங்களே சுறாக்களே, தமிழ்நாட்டின் எல்லா தெருக்களிலும் நீங்கள் பதிவு செய்ய வேண்டிய கதைகள் இருக்கின்றன. கொஞ்சம் உங்கள் கண்களையும் காதுகளையும் கொண்டு மனிதர்களை பாருங்கள்.
.
அங்காடித் தெரு - இதுவரை தமிழ் சினிமா பதிவு செய்ய மறந்த மனிதர்கள் வசிக்கும் தெரு.
.
மறக்காம உங்க கருத்துக்களை எழுதுங்க. தமிழ்மணம், தமிழிஷ் ஓட்டு போடுங்க..
27.03.2010




12 comments:
தமிழ்நாட்டின் எல்லா தெருக்களிலும் நீங்கள் பதிவு செய்ய வேண்டிய கதைகள் இருக்கின்றன. கொஞ்சம் உங்கள் கண்களையும் காதுகளையும் கொண்டு மனிதர்களை பாருங்கள்.// Well said.
நல்ல பதிவு நண்பரே.. வாழ்த்துகள்.
@ஆதிமூலகிருஷ்ணன் : நன்றிங்க்னா. இந்த திரைப்படத்தை பற்றி இன்னும் நிறைய பேசியிருக்கவேண்டும். பதிவின் நீளம் கருதி எழுதாமல் விட்டது, இப்படத்திற்கு நான் செய்யும் அநீதி.
குறிப்பாக அந்த மாற்றி திறன் மனிதரும், அவர் மனைவியும் வரப்போகும் குழந்தைக்காக வேண்டிய வேண்டுதல். எத்தனையொரு முரண். மனிதர்களின் குரூரம் பேசும் வேளையில், அந்த கண்ணில்லாத முதிய வியாபாரி "மனுஷங்களை நம்பி இந்த 30 வருஷமா தொழில் பண்றேன், இன்னைக்கு வரைக்கும் எந்த குறையுமில்ல". எத்தனையொரு முரண். இன்னும் பேசலாம். சுகுணா, அய்யனார், வளர், பைத்தியக்காரன் அல்லது வேறு யாராவது சிறப்பாக எழுதுவார்கள். படிப்போம்.
@Cable Sankar : நன்றிங்க்னா. :)
ரொம்ப நல்ல விமர்சனம். நன்றி.
nice critics
MSK,
படம் அனைத்து தரப்பினரையும் கவர்ந்து இருக்கிறது. நல்லதொரு படம் என்ற பெயரை ரிலீஸ் ஆன நாளிலேயே பெற்றுள்ளது.
ஆனாலும் ஹிட் ஆகுமா?
விமர்சனம் மிக அருமை.
மனோ
படம் பார்க்கும் ஆவலை தூண்டியிருக்கிறது உங்கள் பதிவு.
ம்ம்ம்...படித்தவுடன் பார்க்க வேண்டும் எனத் தோன்றுகிறது!
@இராமசாமி கண்ணண் : நன்றிங்க்னா..
@Anonymous : நன்றிங்க்னா..
@King Viswa : நேற்று கூட படம் ஹவுஸ்புல் இல்ல. கூடவே IPL,அடுத்த வாரம் பையா,Clash of Titans, இந்த படத்திற்கு பிரச்சனைதான் என்று நினைக்கிறேன். மேலும் கொஞ்சம் கனத்த படங்களுக்கு சென்று கனத்த மனோதொடு வருவதை பலரும் விரும்புவதுமில்லை. எல்லாருக்கும் வாரயிறுதியில் பொழுதுபோக்குதான் தேவைப்படுகிறது. ஆனால் நல்ல விமர்சனங்கள் இன்னும் கொஞ்சம் மக்களை பார்க்கவைக்கும் என்று நினைக்கிறேன். பார்க்கலாம்.
நன்றிங்க்னா..
@MANO : நன்றிங்க்னா..
@மதுரைக்காரன் : படம் பாருங்க. நிச்சயம் பிடிக்கும். நன்றிங்க்னா..
@அன்புடன் அருணா : படம் நிச்சயம் பாருங்க.நன்றிக்கா..
பகிர்வுக்கு நன்றி.
The Best Film... nice post..!!!!
http://www.facebook.com/pages/akai-teru-Angaadi-theru-The-Movie/103173173058140
Post a Comment