
IMDB Rating : 8.3/10 :: (Top 250: #118)
2004 Cannes Film Festival -இல் Grand Prix -ஐ வென்ற மற்றும் அப்போது President of the Jury ஆக இருந்த director Quentin Tarantino-ஆல் சிறப்பு பாராட்டும் பெற்ற இக்கொரிய திரைப்படம் ஏற்படுத்திய தாக்கங்களும் அதிர்வுகளும், உச்சம்.
இத்திரைப்படம், நான் பார்த்த முதல் கொரியத் திரைப்படம். இத்திரைப்படத்தின் பின்னணி இசை இன்னும் மனதுக்குள் கிடந்து சுழல்கிறது.
Oh Dae-Su கடத்தப்பட்டு, ஒரு அறைக்குள் சிறைவைக்கப்படுகிறான். ஏன், எதற்கு என்று எதுவும் சொல்லப்படாமலேயே. அறைக்குள் படுக்கை முதல் தொலைக்காட்சி வரை இருக்கிறது. உணவு ஒரு சிறு நுழைவு வழியாக வரும். தூங்க வைக்கவும், சிகை திருத்த உதவியாகவும் அறைக்குள் மயக்கப் புகை செலுத்தப்படும். தொலைக்காட்சி செய்திகளில் தன் மனைவி கொல்லப்பட்டதையும் தன் சிறு வயது மகள் கடத்தப்பட்டதையும் தெரிந்து கொள்கிறான். எதுவும் அவனால் செய்ய முடியாத கையறு நிலை. வெளியே வந்து பழிவாங்க ஏதுவாக அறையின் சுவரில் ஒரு மனித உருவத்தை வரைந்து, அதை தாக்கி, பயிற்சியெல்லாம் எடுத்துக்கொள்கிறான். அறைக்குள் சிறைவாசம்; இப்படியாக பதினைந்து வருடங்கள் கழிகிறது.
திடீரென்று ஒரு நாள் விடுவிக்கப்படுகிறான். முதலில் தன் மகளைக் கண்டுபிடிக்க வேண்டுமென்று நினைக்கிறான். ஒரு ஹோட்டலில் சாப்பிட செல்லும்போது, இளம் பெண்ணொருத்தியை சந்திக்கிறான். மையல் கொள்கிறார்கள். அந்த பெண் தன் வீட்டில் தங்க இடம் கொடுக்கிறாள். தன் எதிரியை சந்திக்க நேர்கிறது. எதிரியை கொல்ல முயற்சிக்கும் போது, "என்னை கொன்றுவிட்டால், உன்னை பதினைந்து வருடம் ஏன் சிறைவைத்திருந்தேன் என்பது உனக்கு தெரியாமலே போய்விடும்" என்கிறான். ஐந்து நாட்கள் கால அவகாசம் தரும் அந்த எதிரி, "ஐந்து நாட்களுக்குள் இதற்கான காரணத்தை கண்டுபிடித்தால் நானே தற்கொலைசெய்து கொள்கிறேன் என்றும், ஒருவேளை உன்னால் அந்த காரணத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், இப்போது புதியாய் உன் வாழ்வில் வந்திருக்கும் அந்த இளம்பெண்ணையும் கொலை செய்வேன்" என்றும் சவால் விடுக்கிறான்.
அந்த எதிரி யார், தன் மகள் என்னவானாள், பதினைந்து வருட சிறைவாசத்தின் பின்புலம், இப்போது உள்ளத்தாலும் உடலாலும் ஒன்றிப்போன புதுக்காதலியின் உயிர், ஐந்து நாட்கள். என்ன செய்கிறான் Oh Dae-Su? காரணங்களைக் கண்டுபிடிக்க முயல்கையில் ஒரு பிளாஷ்பேக். இந்த பிளாஷ்பேக்கையும் கதையின் முடிவையும் சொல்லிவிட்டால் படத்தின் சுவாரஸ்யம் ஒன்றுமில்லாமல் போய்விடும். ஆகவே படம் பார்த்துக்கொள்ளுங்கள்.
இப்படத்தை யார் பார்க்கலாம் : உலகளாவிய சினிமாக்கள் மீது ஆர்வம் கொண்டவர்களும்; புனிதங்களின் மீதான நம்பிக்கையற்றவர்களும்; மனதைரியம் கொண்டவர்களும் மட்டும் பார்க்கலாம்.
இப்படத்தை யார் பார்க்கவேண்டாம் : உச்சக்கட்ட வன்முறைகளும் ரத்தங்களும் கொண்ட படங்களை பார்க்க விரும்பாதோர், புனிதங்களின் மீதான நம்பிக்கை உடையோர், கலாச்சார காவலர்கள், கொஞ்சம் இயல்பான நெகிழ்வான மனம் கொண்டவர்கள் இப்படத்தை தவிர்ப்பது நலம்.
இப்படத்தின் பலம், இப்படத்தின் அத்தனைக் கூறுகளுமே. குறிப்பாகக் கதையும், திரைக்கதையும், படத்தொகுப்பும், பின்னணி இசையும், கூடவே இக்கதையை படமாக்க துணிந்த இயக்குனரின் மன தைரியமும். இப்படத்தின் பின்னணி இசை போல், சமீபத்தில் அத்தனை அற்புதமான, அவ்வளவு பொருத்தமான பின்னணி இசையை எத்திரைப்படத்திலும் காண முடியவில்லை. Oh Dae-Su இருபதுக்கும் மேற்பட்ட நபர்களுடன் சண்டையிடும், சினிமாஸ்கோப் போன்றதொரு காட்சியின் ஒளிப்பதிவும் பின்னணி இசையும்.. அற்புதம்.
கீழே கண்ணுக்கு தெரியாமல் இருக்கும் சில வரிகளை, இப்படத்தை பார்க்காதவர்களும், பார்க்க வேண்டாதவர்களும் mouse-ஆல் select செய்யாதீர்கள்..
இத்திரைப்படம் ஏற்படுத்தி செல்லும் அதிர்வுகளும், கேள்விகளும் சில புனிதங்களை கேள்விக்குள்ளாக்குகிறது. எதிரி, Oh Dae-Su-ஐ பார்த்து சொல்லும் இந்த டயலாக் : "My sister and I loved each other despite everything. Can you two do the same?" பல கேள்விகளை எழுப்புகிறது. உணர்வுகள் புனிதங்களுக்கு அப்பாற்பட்டவையே.
பிற தகவல் : கொரிய மக்கள் பாம்புகள் முதல் இன்ன பிற உயிரினங்களை, உயிருடனோ அல்லது பச்சையாகவோ அல்லது சமைத்தோ சாப்பிடும் பழக்கமுடையவர்கள். இப்படத்தில் Oh Dae-Su ஒரு உயிருடன் இருக்கும் ஆக்டோபசை சாப்பிடுவதாக ஒரு காட்சி வரும். அந்த காட்சி இயல்பாக எடுக்கப்பட்ட காட்சியே.
IMDB Link
My Rating : *****
மறக்காம உங்க கருத்துக்களை எழுதுங்க. தமிழ்மணம், தமிழிஷ் ஓட்டு போடுங்க..
29.04.2009








